தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன.
இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விஜய் கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் பிரசாரம் செய்திருக்கிறார். கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது?" என்று கேள்விக் கனைகளைத் தொடுத்து திமுக அரசை விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "காவல்துறை சரியாகச் செயல்பட்டதற்கு சல்யூட் அடித்தார் தவெக தலைவர். செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்" என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், "கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.
எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.