திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவிற்கு சில கேள்விகளை கேட்டு பதில் அளிக்க கேட்ட நிலையில், அதற்கான பதிலை பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கொடுத்துள்ளார். அதில்.
கேள்வி : ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்த பின்பு #WashingMachine -ல் வெளுப்பது எப்படி?
பதில் : செந்தில் பாலாஜியை அருகில் வைத்துக் கொண்டு கண்ணாடியை பார்த்துக் கொண்டே நீங்கள் பேசுவதை உணரமுடிகிறது.
கேள்வி : நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் ஹிந்தியிலும், சமஸ்க்ரிதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
பதில் : இந்தியாவின் அலுவல் மொழி ஹிந்தி தான் என்பது கூட அறியாமல் இந்த கேள்வியை கேட்டிருந்தால் அது அறியாமை, அறிந்தே கேட்டிருந்தால் ஆணவம்!
கேள்வி : ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
பதில் : அறிவியலை நம்பிக்கைகளின் மூலம் விதைக்கும் பெரும்பான்மை ஹிந்து மதத்தை/சனாதன தர்மத்தை சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்காக, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அவதூறு செய்தும், இழித்தும், பழித்தும் பேசி சிதைப்பது ஏன்?
கேள்வி : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
பதில் : எதிர்க்கட்சியாக இருந்த போது ஆளுநரை சந்தித்து குழப்பம் விளைவித்து என்ன சாதித்தீர்கள் என சொல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே! நாங்களும் அதை சாதிக்கிறோம்.
கேள்வி : பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக மக்களின் வாக்குகளை பறிக்கும் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?
பதில் : வாக்குத் திருட்டு, கள்ள ஒட்டு, வாக்குச்சாவடி வன்முறை, ஓட்டுக்கு காசு, முடிவையே மிரட்டி மாற்றும் வன்மை, போட்டியாளர்களை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துதல் என ஓட்டுக்காக, அது தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் சுகத்திற்காக மக்களின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை சீர்குலைத்த முதல் கட்சி திமுக தான் என உலகறிந்த நிலையில், போலி வாக்காளர்களை தவிர்க்கும் #SIR க்கு எதிராக நீங்கள் பேசுவது வியப்பில்லை.
கேள்வி : இரும்பின் தொன்மை குறித்து அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்க மனம் வராதது ஏன்?
பதில் : தமிழ்நாட்டின் தொன்மை, தொல்லியல் அருமை பெருமைகள் சிறப்பானது என்பதை யாருமே மறுப்பதற்கில்லை எனும் நிலையில், இந்தியா முழுவதும் தொல்லியல் துறையின் ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கையில் ஆராய்ச்சியின் முடிவை இப்போதே வெளியிட வேண்டும் என்பது முறையல்ல என்பதோடு தொல்லியலில் அரசியலை கலப்பது பெருமையல்ல.
கேள்வி : கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
பதில் : கீழடி ஆராய்ச்சியை துவக்கியதோடு மட்டுமல்லாமல் முதல் இரண்டு ஆய்வு அறிக்கைகள் நூறாண்டுகளுக்கு மேலாக உள்ள மத்திய தொல்லியல் துறையினுடையது தான் என்பது தெரியுமா மு.க.ஸ்டாலின் அவர்களே? தொல்லியல் துறை என்பது அரசியல் அறிக்கை அல்ல, பொறுமை தான் பெருமை சேர்க்கும் என்பது புரியுமா ஸ்டாலின் அவர்களே?
கேள்வி : இதற்கெல்லாம் பதில் வருமா?
பதில் : இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
கேள்வி : இல்லை வழக்கம் போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய் பிரச்சாரத்தை தொடங்குவீர்களா?
பதில் : ஃபாக்ஸ்கான் நிறுவனம் செய்யாத முதலீட்டை வந்து விட்டதாக வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய் பிரச்சாரம் செய்த நீங்கள் மற்றவர்களை பார்த்து ஏளனம் செய்கிறீர்களே?
"ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை"!