சீனாவின் செங்டூ நகரில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கு ஒரு நபரின் வயிற்றில் இருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிகரெட் லைட்டரை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், லைட்டரை அகற்ற மருத்துவர்கள் ஆணுறை ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்றால், டெங் என்ற அந்த நபர், 1991-ஆம் ஆண்டு மது போதையில் இருந்தபோது, நண்பர்களுடன் பந்தயம் கட்டி ஒரு லைட்டரை விழுங்கியுள்ளார். விழுங்கிய லைட்டர் தானாகவே வெளியேறிவிடும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளாகச் சிறுசிறு வலிகளுக்கு மருந்துகளை எடுத்துக்கொண்டு, அந்த லைட்டரை அவர் வயிற்றிலேயே சுமந்துள்ளார்.
சமீபத்தில், டெங் அதிக வயிற்று வலி மற்றும் வீக்கத்துடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு இரைப்பைக் கண்ணாடிக் கருவி மூலம் பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் சுமார் 7 சென்டிமீட்டர் நீளமுள்ள கருப்பு நிற சிகரெட் லைட்டரைக் கண்டு திகைத்துப் போயினர். உடனே டெங்குக்கு 1991-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
“நண்பர்களுடன் மது அருந்தும்போது, லைட்டரை விழுங்க முடியாது என்று சவால் விட்டனர். நானும் சவாலை ஏற்று விழுங்கிவிட்டேன்,” என்று அவர் கூறியுள்ளார். இந்தச் செயல் அவரின் மனைவி மற்றும் மகனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ஒரு தனித்துவமான யோசனையைச் செயல்படுத்தினர்.
ஆணுறை மற்றும் இடுக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மெதுவாகக் கான்டமை வயிற்றுக்குள் செலுத்தி, லைட்டரை வலையில் மீன் பிடிப்பது போல, ஆணுறையில் சிக்க வைத்தனர். பின்னர், 20 நிமிட சிகிச்சைக்குப் பிறகு வாயின் வழியே மெதுவாக வெளியே இழுத்தனர்.