உலகம் முழுவதும் அவ்வப்போது நடைபெறும் திருட்டுச் சம்பவங்களில், சில பெரும் விவாதப் பொருளாவது உண்டு. அந்த வரிசையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோஹோ பகுதியில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது தலைப்புச் செய்தியாகியுள்ளது.
இங்குள்ள ஆடம்பரமான ‘4ஜி செல்லர்’ என்ற துணி கடையில், சுமார் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்) மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தேக நபர்களைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. ஸ்பிரிங் தெருவில் உள்ள இரண்டாவது தளத்தில் இயங்கும் இந்தக் கடைக்குள் திருடர்கள் நுழையும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தக் கடை பிரபலமானவர்களின் வடிவமைப்பாளர் ஆடைகளுக்காகப் புகழ்பெற்றது ஆகும். சம்பவம் நடந்த உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 4:30 மணிக்கு, தெருவில் காவலர் ஒருவர் கண்காணித்துக் கொண்டிருந்த போதும், திருடர்கள் தீயணைப்பு ஏணி வழியாக ஏறி, அவர் கண்ணில் படாமல் தந்திரமாக துணி கடைக்குள் நுழைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
“அலாரம் ஒலித்தது கேட்டவுடன், நாங்கள் கடைக்குள் தலைக்கவச விளக்குகளுடன், கட்டுமானப் பணியாளர்கள் உடையணிந்திருந்த இரண்டு முகமூடி அணிந்த நபர்களைக் கண்டோம். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று துல்லியமாகத் தெரிந்திருந்தது,” என்று ‘4ஜி செல்லர்’ கடையின் பங்குதாரரும் விளம்பரத் தூதுவருமான டாமி மகாரி உள்ளூர் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தேக நபர்கள் தனிப்பயனாக்கப்பட்ட ஆடைகள், பெல்ட்கள், பைகள் மற்றும் நகைகளைத் திருடி, அவற்றைக் குப்பை பைகளில் அடைத்து, பால்கனி வழியாக வெளியே காத்திருந்த கூட்டாளி ஒருவரிடம் வீசியுள்ளனர். அவர் அந்தப் பொருட்களை ஒரு தப்பியோடும் காருக்குள் எடுத்துச் சென்றுள்ளார். இந்த கொள்ளைச் செயல் மொத்தமாக சுமார் ஐந்து நிமிடங்களில் முடிந்துள்ளதாகத் தெரிகிறது.
திருடர்கள் தப்பிச் சென்ற 91 வினாடிகளுக்குள் நியூயார்க் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.