விந்தணு தானம் தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று ஐரோப்பாவில் வெளியாகி உள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு விந்தணு தானமளிப்பவர் மூலம் சுமார் 200 குழந்தைகள் பிறந்த நிலையில், அந்தத் தந்தை மூலம் குழந்தைகளுக்கு அபாயகரமான மரபணுக் குறைபாடு (Genetic Mutation) கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நபர், புனைப்பெயருடன் ஐரோப்பிய விந்தணு வங்கியில் (European Sperm Bank) விந்தணுக்களை தானம் செய்துள்ளார்.
இவரது விந்தணுக்கள் 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், 14 நாடுகளில் உள்ள கிளினிக்குகள் மூலம் கிட்டத்தட்ட 197 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது, ஒரு விந்தணு தானமளிப்பவர் இத்தனை குழந்தைகளுக்குத் தந்தையாவது குறித்து சர்வதேச அளவில் விதிமுறைகள் இல்லாததன் விளைவாக ஏற்பட்ட ஒரு பெரிய சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தானமளிப்பவருக்கு இருந்த மரபணுக் குறைபாடு, TP53 எனப்படும் புற்றுநோயைத் தடுக்கும் மரபணுவில் ஏற்பட்ட பிறழ்வு ஆகும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘லி-ஃபிரௌமெனி சின்ட்ரோம்’ (Li-Fraumeni Syndrome) என்னும் அபூர்வ நோய் வருவதற்கான 90% ஆபத்து உள்ளது.
இதனால் அவர்களுக்கு மூளைக் கட்டி மற்றும் லுகேமியா போன்ற குழந்தைப் பருவத்திலேயே புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த விந்தணுவைப் பயன்படுத்திய குழந்தைகளில் சிலர் ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் மிகச் சிறிய வயதிலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பகால பரிசோதனைகளில் இந்த அரிய குறைபாட்டைக் கண்டறிய முடியவில்லை என விந்தணு வங்கி விளக்கமளித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம், விந்தணு தானத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, ஒரே ஒரு தானமளிப்பவரின் பயன்பாட்டை சர்வதேச அளவில் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.