நாட்டில் யு.பி.ஐ. மூலமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யு.பி.ஐ. சேவையை இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) மேலாண்மை செய்து வருகிறது.
தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், கடன் தவணை உள்ளிட்ட மாதாந்திர செலவுகளை தானாக செலுத்துவதற்காக ‘ஆட்டோ பே’ (Auto Pay) வசதி யு.பி.ஐ.யில் வழங்கப்படுகிறது. இந்த வசதி பீம் யு.பி.ஐ., கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல்வேறு செயலிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், பல்வேறு யு.பி.ஐ. செயலிகளில் செயல்பாட்டில் உள்ள ஆட்டோ பே வசதிகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு மேலாண்மை செய்யும் புதிய வசதியை என்.பி.சி.ஐ. அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக upihelp.npci.org.in என்ற தனித்தளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தளத்தின் மூலம், பயனாளர்கள் தங்களின் அனைத்து யு.பி.ஐ. செயலிகளில் செயல்பாட்டில் உள்ள ஆட்டோ பே கட்டணங்களை ஒரே இடத்தில் பார்க்கவும், தேவையெனில் மாற்றம் செய்யவும் அல்லது ரத்து செய்யவும் முடியும்.
இந்த புதிய வசதி இன்று 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என என்.பி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இது யு.பி.ஐ. பயனாளர்களுக்கு கட்டண மேலாண்மையை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.