இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’2012ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பகுதி நேர ஆசிரியர்களாக ஓவியம், உடற்கல்வி, கணினி அறிவியல், தையல் என கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக 5,000 ரூபாய் ஊதியத்தில் 15,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
13 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணியாற்றிய போதிலும் தற்போது 12,500 ஊதியம்தான் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக பெறுகிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் பள்ளிகளின் மற்ற வேலைகளையும் பார்க்கும் இவர்கள் பள்ளி நாட்கள் முழுவதுமாக பணியாற்றுகின்றனர்.
13 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மே மாதம் சம்பளம், பொங்கல் ஊக்கத் தொகை, மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடும் போது கணிசமான தொகை ஊதிய உயர்வாக வழங்கப்படுகிறது.
இதேபோல்தான் பணிநிரந்தரம் வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தின் போது 23-01-2026 அன்று அறிவித்த சம்பள உயர்வு ரூ.2,500 மே மாத உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் சிறப்பு மதிப்பெண் போன்ற உறுதிகள் இன்னும் அரசாணையாக்காமல் இருப்பதால் நடைமுறைக்கு வரவில்லை. காலம் கடந்த இந்த 3 அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் சந்திக்கின்ற வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. இந்தக் குறைந்த ஊதியம் அவர்கள் குடும்பத்தை கவனிப்பதற்கும், பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் போதுமானதல்ல.
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என சொல்லுகிற முதல்வர் ஸ்டாலின் அதை செயலில் காட்ட குறைந்த சம்பளத்தில் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் குடும்பங்களை முன்னேற்ற 2012-ம் ஆண்டுக்கு முன்பாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை ஆகிய பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்ததை பின்பற்றி, நிரந்தரம் செய்யலாம். பணி நிரந்தரம் செய்தால் காலமுறை சம்பளம், அரசு சலுகைகள், பணப் பலன்கள் கிடைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தலைகுனியாமல் இருக்க முடியும்.
அல்லது மாதம் ரூ.30 ஆயிரம் கிடைக்கும் வகையில் காலமுறை ஊதியமாகமாகவும் வழங்கலாம். அத்துடன் ஏற்கனவே இறந்து போன பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வாழ்வாதார நிதியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.