Thaai Kizhavi: 44 வருட வைராக்கியம்.. வந்த சண்டையை விடாத பவுனுத்தாய். ஒரிஜினல் தாய் கிழவி இவங்க தான்!
பேச்சி ஆவுடையப்பன் March 02, 2026 02:44 PM

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள “தாய் கிழவி” படத்தைக் காண, அந்த கதை சம்பந்தப்பட்ட குழுவினர் தியேட்டருக்கு வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

வரவேற்பை பெற்ற தாய் கிழவி

நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள படம் “தாய் கிழவி”. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் மேலும் சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேச்சல் ரெபேக்கா, இளவரசு, முனீஷ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

படம் வெளியான 3 நாட்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்து வருவதால் தாய் கிழவி வசூல் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் பவுனுதாயி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மதுரையில் உள்ள கோபுரம் சினிமாஸில் இப்படத்தைக் காண வருகை தந்தனர்.

தொடர்ந்து படம் முடிந்து வெளியே வந்த பவுனுதாயின் பேரன்கள் பேசும்போது, “அண்ணன் தம்பி மொத்தம் 7 பேர்.. பவுனுதாயி இதுவரை மருத்துவமனைக்கு சென்றதில்லை. இன்று வரை வட்டித்தொழில் செய்தும், நகைகள் சேர்த்தும் வருகிறார். 4 வருட சண்டை நடந்தது உண்மை தான். தாத்தா இறந்தபோது தான் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். சிவகார்த்திகேயன் அண்ணா உண்மையை காண்பித்துள்ளர். பார்த்த எங்களுக்கே அழுகை வந்து விட்டது. இன்று வரை பவுனுதாய் உயிருடன் உள்ளார். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு எதிரில் தான் அவர் வீடு உள்ளது. படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து படம் பாருங்கள்” என தெரிவித்தனர்.

வைராக்கியமான வாழ்க்கை  

தொடர்ந்து பேசிய பவுனுத்தாய், “இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. எனக்கு 7 ஆண்கள், ஒரு பெண் குழந்தை இருந்தது. பிள்ளைகள், பேரன், பேத்தி என 60 பேர் இருக்கிறார்கள். எனக்கு 83 வயதாகிறது. என் கதையை படமாக எடுத்துருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் உங்கள் அப்பா, அம்மாவை எப்படி பார்க்கிறீர்களோ அப்படித்தான் உன்னுடைய எதிர்காலம் அமையும். 40 வயசுல 8 பிள்ளைகளை வைத்துக்கொண்டு வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். பேரன், பேத்திகளுக்கு நகை போட்டு கட்டிக் கொடுத்தேன். எந்த வம்பு சண்டைக்கும் செல்ல மாட்டேன். ஆனால் வந்தால் விடமாட்டேன்” என கூறியுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.