அதிமுக - அமமுக தொண்டர்கள் மோதல்... மதுரையில் பரபரப்பு!
Dinamaalai March 02, 2026 02:48 PM

மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மதுரையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைவர்கள் உள்ளே ஆலோசனையில் இருந்தபோது, விடுதிக்கு வெளியே திரண்டிருந்த அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய அரசியல் கசப்புகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது.

வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்: இந்த மோதலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிலைமை கைமீறிச் சென்றதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைக்க லேசான தடியடி நடத்தினர். மோதல் நடந்த விடுதிக்கு முன்பாகக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.

தலைவர்கள் ஒரே மேடையில் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசிய சில மணி நேரங்களிலேயே, தொண்டர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட இந்த மெகா கூட்டணியில், கீழ்மட்டத் தொண்டர்களிடையே இன்னும் இணக்கம் ஏற்படவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்த மோதல் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.