நல்லவர்களுடன் நல்லதே நடக்கும்” என்ற கேப்டன் சூர்யகுமார் யாதவின் வார்த்தைகள், சஞ்சு சாம்சனின் வாழ்வில் இன்று நிஜமாகியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற அதிரடி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன், இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
196 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்து தடுமாறியது. எனினும், ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய சஞ்சு சாம்சன், மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்த சாம்சன், 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்ட உதவினார்.
சாம்சன் வெற்றிக்கான பவுண்டரியை அடித்தவுடன், ஈடன் கார்டன் மைதானமே அதிர்ந்தது. ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் ‘வந்தே மாதரம்’ என முழக்கமிட்டு வெற்றியை கொண்டாடினர். ஆட்டத்திற்குப் பின் சக வீரர்கள் சாம்சனை கட்டிப்பிடித்துத் பாராட்டினர். பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு சாம்சன் அளித்த ‘ஹை-ஃபைவ்’ (High-five) ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 5-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.