மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
பிஎஸ்இ சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த நிலையில், என்எஸ்இ நிஃப்டி 450 புள்ளிகள் வரை சரிந்து 24,734 நிலைக்கு வந்தது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, பணவீக்கத்தை உருவாக்கும் என்ற கவலையால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுத் தீர்த்தனர்.
இருப்பினும், இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தின் பலவீனத்தை குறிக்கவில்லை என்றும், இது வெறும் தற்காலிகமான 'பதற்ற எதிர்வினை' மட்டுமே என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய நிறுவனங்களின் அடிப்படை வளர்ச்சி மற்றும் வருவாய் வலுவாகவே உள்ளது. எனவே, சிறு முதலீட்டாளர்கள் பீதியடைந்து தங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றும், சந்தை நிலைபெறும் வரை பொறுமை காப்பதே சிறந்தது என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். போர் மேகங்கள் விலகி எண்ணெய் விலை சீரானால், சந்தை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
Edited by Siva