Israel Iran War Latest Update: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் கல்வியாண்டு இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வுகளை எழுதக் காத்திருந்த மாணவர்கள், அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை பிப்ரவரி 28ஆம் தேதி திடீரெனத் தொடங்கிய நிலையில், ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக நேற்று (மார்ச் 1) காலை அறிவிப்பு வெளியானது.
இதைத் தொடர்ந்து, பழிவாங்குவோம் என சூளுரைத்து, ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்திவந்த நிலையில், அது இன்னும் தீவிரமடைந்துள்ளது. அதோடு, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் ஈரானில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தெற்கு ஈரானில் உள்ள பள்ளியொன்றில் நடந்த தாக்குதலில், குறைந்தபட்சம் 153 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதேபோல வான்வழித் தாக்குதலில் 201 பேர் கொல்லப்பட்டதாகவும் 747 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஈரானில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் கல்வியாண்டு இறுதி வரை மூடுவதாக, ஈரான் அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.