திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தர்ம தரிசன வரிசையில், இரண்டு பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணதேஜ ஓய்வறையின் அருகே வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, இருவருக்குள் திடீரென மோதல் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த ஒரு பக்தர், தான் அணிந்திருந்த பெல்ட்டைக் கழற்றி மற்றொரு பக்தரை சரமாரியாகத் தாக்கினார். இதனால் வரிசையில் நின்றிருந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அங்கும் இங்கும் ஓடியதால் கியூ லைனில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) இதற்கு விளக்கம் அளித்துள்ளது. பக்தர்கள் மோதலில் ஈடுபட்டபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சக பக்தர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.