நாகர்கோவிலில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையைக் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்ட செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்குப் பிரதமர் வருகை தந்துள்ள வேளையில், அவரது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் விதமாகவும் அவரை இழிவுபடுத்தும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமார் முப்பது நபர்களுடன் இணைந்து செய்யப்பட்ட இந்த அநாகரிகமான செயலைத் தடுத்து நிறுத்தாமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு சுமார் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் வழங்கியுள்ள நிலையில், அதற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய கடமையை திமுக அரசு மறந்துவிட்டதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்தகைய அத்துமீறல்களை திமுக அரசு அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பிரதமரை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.