பொது நிகழ்வுகளில் பெண் நடிகர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் பொருத்தமற்ற கோணங்களில் படமாக்கப்பட்டு பரப்பப்படுவது குறித்து நடிகை சப்தமி கெளடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு சில தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நடத்தை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
திரைப்பட நடிகைகள் அண்மை காலத்தில் அதிகம் எதிகொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று ஆபாசமான கோணத்தில் புகைப்படம் எடுக்கப்படுவது. திரைப்பட நிகழ்ச்சிகளில் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடிகைகள் கலந்துகொள்ளும் போது புகைப்படகாரர்களால் அவர்கள் ஆபாசமான கோணத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினரால் பகிரப்படுகின்றன. இது தவிர்த்து நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து காந்தாரா பட நடிகை சப்தமி கெளடா துணிச்சலாக பேச முன்வந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார் . அதில் அவர்
"திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையில் நாங்கள் இணைந்து நிற்கிறோம். பொது நிகழ்வுகளில் பெண் நடிகர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் பொருத்தமற்ற கோணங்களில் படமாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன, எங்கள் வேலையை விட எங்கள் உடலை தேவையற்ற முறையில் ஜூம் செய்து புகைப்படம் எடுக்கிறார்கள். ஒரு சில தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நடத்தை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் எங்கள் கலைக்காக இங்கே இருக்கிறோம். எங்கள் சினிமாவுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்.
வேண்டுமென்றே ஜூம்-இன்கள் மற்றும் பொருத்தமற்ற கோணங்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். அவை கண்ணிய மீறல்கள் மற்றும் அவற்றை இயல்பாக எடுத்துக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடிப்படை மரியாதை மற்றும் நாகரிகத்தோடு நடத்தப்பட வேண்டும். இந்த எல்லையை நிர்ணயிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இதை அனுபவித்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம், மரியாதை கோருவதில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிப்போம்." என்று சப்தமி கெளடா பதிவிட்டுள்ளார்.