அதிகாலையில் கிணற்றுக்குள் பாய்ந்த கார்… நீருக்குள் மூச்சு திணறி 3 வழக்கறிஞர் பலி… கிரிவலம் சென்று திரும்பிய போது சோகம்!
TV9 Tamil News March 03, 2026 08:48 PM

சென்னை பகுதியை சேர்ந்த 4 பேர் ஒரே காரில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பௌர்ணமி கிரிவலத்துக்காக சென்றுள்ளனர். அவர்கள், கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் அதே காரில் தங்களது ஊர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது கார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ஆலம்பூண்டி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி-புதுச்சேரி சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ( மார்ச் 3) அதிகாலை வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அந்தப் பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்தது. இதில், காரின் உள்ளே இருந்த 4 பேரும் காரின் உள்ளே சிக்கி கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியாததால் கார் நீரில் மெல்ல மெல்ல மூழ்கியது. இந்த விபத்து குறித்து அறிந்த அந்த வழியாக சென்றவர்கள் செஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

காரின் உள்ளே சிக்கி 3 வழக்கறிஞர்கள் பலி

அதன் பேரில், செஞ்சி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவரை தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்களை உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: ரயில் பயணிகளுக்கு உற்சாக அறிவிப்பு.. நிரந்தர ரயிலாக மாறிய திருச்சி–தாம்பரம் எக்ஸ்பிரஸ்

தூக்க கலக்கத்தால் கொடூர விபத்து

இதில், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் வினோத், ராஜா, தேவன் என்பதும் இவர்கள் 3 பேரும் வழக்கறிஞர்கள் என்பதும் தெரிய வந்தது. அதிகாலை நேரத்தில் காரை ஓட்டியவர் தூக்க கலக்தத்தில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலை பகுதிகளில் சாலையோரம் உள்ள கிணறுகளில் சுற்றுச்சவர் இல்லையெனில் அதனை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

சுற்றுச்சுவர் இல்லாததால் பறிபோன மூன்று உயிர்

தற்போது விபத்து நிகழ்ந்த கிணறு சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஆகும். இதன் காரணமாக கார் கிணற்றுக்குள் விழுந்து மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி பகுதியில் மட்டும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கிணறுகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, அந்தப் பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: சின்னம்மை நோய் பரவல்.. பொது மக்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தல்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.