வரவிருக்கும் அக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு குழந்தைகளின் மனநலத்தை பாதிப்பதோடு, அவர்களின் தனியுரிமை மற்றும் ஆன்லைன் பாதுகாப்பிற்கும் ஆபத்தை உருவாக்குகிறது என்ற கவலையை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோர்களின் கருத்துகளை கேட்டு, சட்ட ரீதியான முடிவுகளை எடுக்க அரசு ஆலோசனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முழுமையான தடை, இரவு நேர பயன்பாட்டு கட்டுப்பாடு, மேலும் குழந்தைகளை அடிமைப்படுத்தும் அம்சங்களை நீக்குதல் போன்ற பல்வேறு விருப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ கருத்துக்கேட்பு தற்போது நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா போன்ற நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு சட்டத் தடையை அமல்படுத்தியுள்ளன.
இதேபோல் கிரீஸ், போலந்து,நார்வே, டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாட்டு மசோதாக்களை கொண்டு வரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
மேலும், குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் இந்த முயற்சி, டிஜிட்டல் உலகில் பொறுப்பான பயன்பாட்டை உருவாக்கும் புதிய மாற்றமாகக் கருதப்படுகிறது.