தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் நிலையில், கட்சித் தலைமையிடம் அவர் தனது மனுவை வழங்கினார்.
ஏற்கனவே கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் இதே திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் விருப்பமனுத் தாக்கல் நிகழ்வில், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு மட்டத்திலான நிர்வாகிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
மேலும் தொடக்கத்தில் மார்ச் 2-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று மார்ச் 6-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தனது சொந்தத் தொகுதியான திருவெறும்பூரில் ஹேட்ரிக் வெற்றி பெறும் இலக்குடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த முறை களம் இறங்கியிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.