தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ளது தென் தமிழகத்தின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் கொழுக்கு மலை. இந்த மலைப்பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 7, 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அளவுக்கு மரம், செடி, கொடி ஆகியவை வளர்ந்துள்ளது. இந்த மலையில் உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. மிக உயரமான இடத்தில் இந்த தேயிலைகள் விளைவதால் தனித்துவமான புத்துணர்ச்சி தரும் சுவை இந்த தேயிலையில் உள்ளதாக கூறுகின்றனர். இதனால், இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக தேயிலைகளை வீட்டுக்கு வாங்கி வாருங்கள்.
இந்த தேயிலை தோட்டங்களை சுற்றி பார்ப்பதுடன், அப்படியே சற்று நடந்து சென்றால் அங்கு வீசும் தென்றல் காற்றும், தேயிலை வாசனையும் நமது மூக்கில் நுழைந்து மூளை வரை சென்று, மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் சிறிதளவு ஐயமில்லை. இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை வேளையில் கண்டிப்பாக சுற்றுலா செல்ல வேண்டும். ஏனெனில், படர்ந்து விரிந்துள்ள தேயிலை தோட்டத்துக்கு மத்தியில் இளம் வெயிலோடு உதிக்கும் சூரியனையும், அதே இளம் வெயிலோடு அஸ்தமனம் ஆகும் சூரியனையும் பார்ப்பதற்கு காண கண் கோடி வேண்டும்.
இந்த பகுதியில் அமைந்துள்ள சிங்கம் பாறை மீது நின்றவாறு சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்ப்பதே ஒரு சிறந்த அனுபவமாகும். அந்த அளவுக்கு கொழுக்குமலை ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தை நமக்குத் தரும். இவ்வளவு விஷயங்கள் சொல்லிவிட்டு, இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அது என்னவெனில் இங்கு விற்பனை செய்யப்படும் சூடான லெமன் டீ யை பருகாமல் இந்த சுற்றுலா பயணம் முழுமை அடையாது என்பதாகும். இதே போல, திகிலூட்டும் திரில்லிங்கான ட்ரெக்கிங் பயணத்தையும் இந்த பகுதியில் மேற்கொள்ளலாம்.
அவ்வாறு ட்ரெக்கிங் செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கிருந்து மீசை புலி மலை வரை ட்ரெக்கிங் செல்லலாம். இந்த ட்ரக்கிங் பயணத்தின் போது ஊசி இலை காடுகள், பசுமை போர்த்திய நிலங்கள் ஆகியவற்றை சுற்றி பார்த்து விட்டே செல்லலாம். அதற்கு சிறந்த இடமாக இந்த கொழுக்குமலை விளங்கி வருகிறது. இந்த பகுதியில் தங்க வேண்டும் என்று விரும்பினாலும், தங்குவதற்கு வசதி உள்ளது. அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். இரவு நேரங்களில் கேம்ப் அமைத்து தங்குவதற்கும் இங்கு வசதி உள்ளது.
இதனால் ஒரு தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை நாம் இந்த பகுதியில் பெற முடியும். தேனியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு சுமார் 4 மணி நேர பயணத்தில் செல்ல முடியும். இந்த பகுதி தமிழகத்தில் இருந்தாலும் கேரள மாநிலம் சூரிய நெல்லி வழியாகவே செல்ல முடியும். அதுவும் மலைப்பாங்கான பகுதி என்பதால் ஜீப் மூலமாகவே அந்த பகுதியை நாம் அடையலாம். பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சற்று இளைப்பாறுவதற்கு இந்த இடத்துக்கு சுற்றுலா செல்லலாம்.