2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மீண்டும் அரசியல் கணக்குப் புத்தகத்தின் முக்கிய பக்கமாக மாறியுள்ளன. கடந்த 2021 தேர்தலைவிட இம்முறை இந்தப் பகுதிகளில் வெற்றியைப் பெற திமுகவும் அதிமுகவும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. காரணம், கடந்த தேர்தலில் தென் மாவட்டங்கள் இரு கூட்டணிகளுக்கும் அளித்த அரசியல் அனுபவங்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம் வரை தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகள் அதிமுகவின் வலுவான ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு அந்த அரசியல் சமநிலை மாறியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீது “கவுண்டர் கட்சி” என்ற விமர்சனம் எழுந்ததாலும், முக்குலத்தோர், நாடார், பட்டியலினத்தோர் போன்ற சமூகங்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்கு பிளவுபட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 58 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த சமூகங்களின் வாக்குகளே வெற்றி–தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணி என பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலின் போது சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவுக்கு வெளியே இருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வட்டமும் பலவீனமாக இருந்த சூழலில், தினகரன் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிமுக வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தினார்.
இந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு, சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை ஒரே அணிக்குள் கொண்டுவர பாஜக முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இறுதியில் தினகரன் மட்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தார். இதனால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது.
சசிகலா புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பதும், வெற்றியை நோக்கி அல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் வெற்றியைத் தடுக்க முயற்சியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் அமைப்புகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அவரது தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் திமுகவும் தனது அரசியல் கணக்குகளை அமைத்து வருகிறது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, ஓ.பன்னீர்செல்வத்தை தென் மாவட்டங்களில் பிரச்சார முகமாக முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “எடப்பாடியால் ஏமாற்றப்பட்டேன்” என்ற அரசியல் செய்தியை தென் மாவட்டங்களில் பரப்ப ஓபிஎஸ்ஸை பயன்படுத்தலாம் என்ற அணுகுமுறையும் திமுகவில் இருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் சமூக அடையாள அரசியலை கருத்தில் கொண்டு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸை திமுக சின்னத்தில் போட்டியிடச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கடந்த தேர்தலில் தினகரனுடன் இருந்த எஸ்டிபிஐ கட்சியையும் திமுக தனது அணியில் இணைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக தரப்பில் கூட்டணி பலம் மற்றும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசியல் சூழலும் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என அதிமுக மதிப்பிடுகிறது.
மொத்தத்தில், தென் மாவட்டங்கள் மீண்டும் 2026 தேர்தலில் அரசியல் வெற்றியின் முக்கிய திறவுகோலாக மாறியுள்ளன. இந்த பகுதிகளில் உருவாகும் வாக்கு சமநிலை தான் இறுதியில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை தீர்மானிக்கப் போகிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.