கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியினருக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அந்த வீட்டிற்குள் புகுந்து 70 வயது முதியவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின்போது முதியவரின் அறுபது வயது மனைவியை அந்த மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முதியவரைக் கொலை செய்துவிட்டு அவரது மனைவியைக் கொடுமைக்கு உள்ளாக்கிய இந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் இத்தகைய கொடூரச் சம்பவம் அரங்கேறியது மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.