“விஜய் மக்கள் சந்திப்பை முடக்க சதி”.. தமிழகம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..
TV9 Tamil News March 09, 2026 05:48 PM

சென்னை, மார்ச் 09: மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தவெக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 12ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும், சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..

நாளை வேட்பாளர் நேர்காணல் நடக்குமா?

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தவெக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட கடந்த பிப். 6 ஆம் தேதி முதல் பிப். 20 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் மார்ச் 10ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் நேர்காணல் மேற்கொள்ள உள்ளதாகவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய் நாளை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை வேட்பாளர் நேர்காணல் நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு:

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும்…

— TVK Party HQ (@TVKPartyHQ)

இதுகுறித்து தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

மேலும் படிக்க: கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை நிலவரம் இதோ..

மார்ச் 12ம் தேதி அறிவிப்பு:

இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.