கரூர் கொடூர சம்பவம்… தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்!
TV9 Tamil News March 09, 2026 05:48 PM

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம்  இரு முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, 2 முறை விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். தற்போது, 3- ஆவது முறையாக விசாரணைக்கு நாளை செவ்வாய்க்கிழமை ( மார்ச் 9) ஆஜராக கோரி சிபிஐ அதிகாரிகள் சமன் அனுப்பியுள்ளனர். அதன்படி, நாளை விஜய் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயிடம் 6 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில், திருச்சியில் இருந்து கரூர் செல்ல தாமதம் ஏற்பட காரணம் என்ன. கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் இருந்ததை எப்போது உணர்ந்தீர்கள். இந்த சம்பவத்துக்கு முன்னதாக போலீஸ் உங்களை தடுத்தும் நீங்கள் அதை மீறி சென்றது ஏன். கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்த போது எதற்காக பேச்சை நிறுத்தவில்லை என்பன உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியிருந்தனர். இதற்கு விஜய் பதில் அளித்து இருந்தார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் இஃப்தார் நிகழ்ச்சியில் ‘சீட்’ அரசியல் – பதில் சொல்லாமல் நழுவிய செல்வப்பெருந்தகை

விஜயின் பதிலும்- விசாரணை தகவலும் முரண்பாடு

விஜய் அளித்த பதில்களுக்கும், சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றுக்கும் முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் விஜய் இடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக வெற்றி கழகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அந்த மனுக்களை சமர்ப்பித்த கட்சியினரிடம் வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெற உள்ளது. இந்த நேர்காணலை விஜய் நடத்த இருந்த நிலையில், அவருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அவகாசமின்றி சம்மன் விஜய்க்கு சம்மன்

கடந்த முறை 10 நாள்களுக்கு முன்னதாக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், தற்போது, அவகாசம் இன்றி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், விஜய் விசாரணைக்கு ஆஜர் ஆவாரா அல்லது வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்பாரா என்பது கேள்வி எழுந்துள்ளது. அப்போது சுமார் 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது. இதனால், அவர் டெல்லியில் தங்கி இருந்தார். தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை நாட்கள் விசாரணை நடைபெறும் என்று தெரியவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் படிக்க: வெற்றி வாய்ப்புள்ள 28 தொகுதிகள் எவை?.. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர்கள் ஆலோசனை..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.