ஏடிஎம்-இல் ரூ.10,000 மட்டும் எடுக்க போன நபர்.. ரூ.3 லட்சம் அள்ளி கொடுத்த ஆச்சரியம்.. நடந்தது என்ன?
Webdunia Tamil March 20, 2026 05:48 PM

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 2017-ல் ஏடிஎம் இயந்திரத்தில் 10,000 ரூபாய் எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை; ஆனால் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டது.

ஒன்பது ஆண்டுகளாக வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால், அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு, ஏடிஎம்-மில் பணம் வராவிட்டால் ஐந்து நாட்களுக்குள் அதனை திருப்பி தர வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியை வங்கி மீறியது விசாரணையில் உறுதியானது.

தற்போது 2026-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி, வங்கி அந்த 10,000 ரூபாயை 9 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும். மேலும், தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் வீதம், கடந்த 3,288 நாட்களுக்கு மொத்தம் 3,28,800 ரூபாயை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர மன உளைச்சலுக்காக 3,000 ரூபாயும், வழக்குச்செலவுக்காக 2,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஒரு சிறிய வங்கி பிழைக்கு ஒன்பது ஆண்டுகள் கழித்து அசல் தொகையை விட 30 மடங்கு அதிக அபராதத்தை வங்கி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.