'அருணாச்சலம்' டைட்டில் எப்படி உருவானது எப்படி தெரியுமா? – சுந்தர்.சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
Seithipunal Tamil March 21, 2026 07:48 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் ஒரு கிளாசிக் படமாக கருதப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் எப்படி உருவானது என்பது குறித்து இயக்குநர் சுந்தர்.சி ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

சுந்தர்.சி கூறியதாவது, இந்த படத்திற்கு முதலில் “குபேரன்” என்ற தலைப்பை தான் வைத்திருந்தோம். ரஜினி படங்களின் டைட்டிலுக்கு எப்போதும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நேரத்தில் “குபேரன்” என்ற பெயர் வெளியே கசிந்துவிட்டதால், அந்த டைட்டிலை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பிறகு படத்தின் கதையை நினைத்து, மக்கள் மனதில் பதியும் ஒரு வலுவான பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது “அருணாச்சலம்” என்ற பெயரை ரஜினிகாந்த் தான் பரிந்துரைத்தார்.

ஆனால் ஆரம்பத்தில் அந்த டைட்டில் குறித்து சுந்தர்.சி-க்கு சிறிய தயக்கம் இருந்ததாம். அப்போது ரஜினி தனது காந்தக் குரலில் “அருணாச்சலம்…” என்று உச்சரித்து காட்டியபோது, அந்த பெயரே படத்திற்கு சரியாக பொருந்தும் என்று சுந்தர்.சி சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இந்த பெயர் கிராமத்து பாணியையும், சக்தியையும், பொதுமக்களுடன் இணையும் உணர்வையும் கொண்டிருந்ததால் ரசிகர்களிடம் எளிதில் சேரும் என்று படக்குழு நம்பியது. படம் வெளியான பிறகு “அருணாச்சலம்” என்ற டைட்டில் ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானது.

படத்தில், சாதாரண வாழ்க்கை வாழும் அருணாச்சலம் திடீரென ஒரு பெரிய செல்வந்தரின் வாரிசாக இருப்பது தெரியவருகிறது. ஆனால் அந்த சொத்தை பெற அவர் ஒரு மாதத்திற்குள் மிகப்பெரிய தொகையை செலவு செய்ய வேண்டும் என்ற சவால் முன்வைக்கப்படுகிறது.

அந்த சவாலை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மையக் கதை. இந்தப் பயணத்தில் வரும் காமெடி, உணர்ச்சி, ஆக்ஷன் ஆகியவை படத்தை ரசிகர்களுக்கு மிகவும் ரசிக்கத்தக்கதாக மாற்றின.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல், மாஸ் டயலாக்கள், சுந்தர்.சியின் இயக்கம் ஆகியவை இணைந்து ‘அருணாச்சலம்’ படத்தை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.