தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?
Vikatan March 21, 2026 11:48 PM

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 - அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இரு பிரிவுகளின்கீழ் சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

நேற்றைய தினம், TN 23 DK 9579 பதிவெண் கொண்ட மேயரின் டொயோட்டா கிளான்ஸா காரையும் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர்.

எம்.எல்.ஏ கார்த்திகேயன் - மேயர் சுஜாதா

இந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், விளக்கமளிக்கவும் மார்ச் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறும் மேயர் சுஜாதாவுக்கு சத்துவாச்சாரி போலீஸார் இன்று சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

அதேபோல, வழக்கில் தொடர்புடைய தி.மு.க கவுன்சிலர் உட்பட மற்ற இருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநகரச் செயலாளருமான கார்த்திகேயனின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார் மேயர் சுஜாதா.

எனவே, `பரிசுப் பொருள் வழங்கியதில் கார்த்திகேயனுக்கும் தொடர்பிருக்கிறதா?’ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.