குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி சிறுமிகளை விடுதிக்கு அழைத்து செல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
வாஸ்னா பகுதியை சேர்ந்த ஆமீர் அலி ஷேக், முகமது சிராஜ் சல்மானி மற்றும் அல்தாப் அலி அன்சாரி ஆகிய மூன்று இளைஞர்கள், மூன்று சிறுமிகளை தங்களது வலையில் வீழ்த்தி, அவர்களை விடுதிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். இதற்காக 'ஹொனெஸ்டா' என்ற செயலியை பயன்படுத்தி, சிறுமிகளை பெரியவர்களாக காட்டும் வகையில் போலி ஆதார் அட்டைகளை அவர்கள் தயாரித்துள்ளனர்.
ஒரு அறிமுகமான நபர் இவர்களது சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை கவனித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விடுதிக்கு செல்லும் முன்னரே அவர்களை வழிமறித்த காவல்துறையினர், மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அரவிந்த் சௌஹான் என்பவரை தேடி வருகின்றனர்.
இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமிகளுடன் பழகி வந்த இவர்கள், அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva