தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.
உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் கொலை
குறிப்பிட்ட அனுமதி நேரத்திற்குப் பிறகு கடையை திறந்து வைத்ததாகக்கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு போலீஸார் நடத்திய தாக்குதலில் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் , ரகுகணேஷ் உள்பட 10 போலீஸார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்குசிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில் வழக்கின் தீவிரம் காரணமாக சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் முதல் கட்டமாக 2,207 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில், 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் உறவினர்கள் தந்தை-மகன் கொலை வழக்கில் தீர்ப்பு
சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த காவலர்கள் ரேவதி, பியூலா ஆகியோரின் சாட்சியங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பரபரப்பான இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததால் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு வழக்கில் நீதிபதி குறிப்பிட்டவை....
* போலீஸார் அடித்ததால்தான் தந்தை, மகன் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.
* கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் இருவரும் அடைக்கப்பட்ட போதே அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன.
* உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை.
* கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை
* மரணங்களை விளைவிக்கக்கூடிய வகையில் அந்த காயங்கள் இருந்தது.
* கைகளை கயிற்றால் கட்டி தொங்க விட்டு தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. மேசையில் படுக்க வைத்தும் தாக்கியுள்ளனர்.
* ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் காவலர்கள் அடித்துள்ளனர்.
* நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா- மகன் கிடைத்துள்ளனர் என, போலீஸார் பேசிக் கொண்டனர்.
" என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 9 பேருக்கும் வரும் மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.