பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், "காங்கிரஸின் கையாலாகாத் தனத்தால் கடனில் மூழ்கிய இமாச்சல் பிரதேசம்...
திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆளும் இமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சுமார் 30% முதல் 50% வரை ஊதியம் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருப்பது ஒன்றும் அத்தனை அதிர்ச்சியான தகவலல்ல. ஆட்சியில் இருந்த காலத்தில் ஆனானப்பட்ட இந்தியாவையே சுரண்டித் தின்று கடன்கார நாடாக்கிய காங்கிரஸுக்கு இமாச்சல் பிரதேசம் போன்ற ஒரு சிறிய மாநிலத்தைத் திவாலாக்குவது அத்தனை கடினமா என்ன?
அதுமட்டுமன்றி அச்சாணி முறிந்த தேரும், இண்டி கூட்டணியினர் ஆளும் மாநிலங்களும் சரியான இலக்கை நோக்கி நகரவே நகராது என்பதற்குத் தமிழகத்தை ஆளும் திமுக அரசே சிறந்த சான்று. இண்டி கூட்டணியின் நகமும் சதையுமான திமுக, தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தின் சொந்த வருவாய் சுமார் ₹26 ஆயிரம் கோடி குறைந்துள்ளதோடு தமிழகத்தின் கடன் சுமை ₹10.62 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
நல்லவேளையாக இந்தியாவில் மாநில அரசுகளுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சிக்காலம். இல்லையேல் இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களில் உள்ள மக்கள் எல்லாம் ஊழல் அலையில் சிக்கி நிதிச்சுமையால் மூழ்கி இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள்.
நிதி மேலாண்மை, நிர்வாகச் சீர்திருத்தம், முறையாகத் திட்டமிடுதல் உள்ளிட்ட எவ்வித நிர்வாக லட்சணமும் இல்லாத திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை இனியும் ஆட்சியில் தொடரவிட்டால், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியமும் பிடுங்கப்படும்! ஒட்டுமொத்த அரசு இயந்திரமே முடக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.