மக்கள் நீதி மய்யத்துக்கு 2 சீட் ஒதுக்க முன்வந்துள்ளது தி.மு.க. ஆனால், உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என கமல்ஹாசனை கட்டாயப் படுத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தி.மு.க - ம.நீ.ம இடையே என்னதான் நடக்கிறதென விசாரித்தோம்.
திமுக கூட்டணி கட்சிகள்
தி.மு.க கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவாரத்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. காங்கிரஸுக்கு 28, வி.சி.க-வுக்கு 8, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5, ம.தி.மு.க-வுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது தி.மு.க. இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.நீ.ம நிர்வாகிகள் சிலர், "2024 நாடாளுமன்றத் தேர்தலின்மூலம் தி.மு.க கூட்டணிக்கு வந்தது மக்கள் நீதி மய்யம். அப்போது எங்கள் தலைவர் கமல் போட்டியிட ஒரேயொரு எம்.பி தொகுதி கேட்டோம்.
முதலில் ஒரு தொகுதி ஒதுக்க முன்வந்துள்ள தி.மு.க, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்தித்தது. உதயசூரியன் சின்னத்தில் நிற்க தலைவர் விரும்பாத நிலையில்தான் ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தமானது.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இரு சீட்டுகளை ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் தி.மு.க எதிர்பார்ப்பது போல் உதயசூரியன் சின்னத்தில் நிற்க எங்கள் தலைவர் ஒப்புக்கொள்ள மாட்டார் எனக் கருதுகிறோம்" என்றனர்.
உதயநிதி, கமல்ஹாசன்
ம.நீ.ம தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் பேசினோம், "தி.மு.க கூட்டணியில் கூடுதல் சீட் பெறும் நோக்கமெல்லாம் எங்கள் தலைவருக்கு இல்லை. ஆனால் ஒரு தொகுதியில் நின்றால்கூட அது எங்கள் டார்ச் லைட் சின்னமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அவரை பொறுத்தவரை, 'நம் கட்சியை சார்ந்த ஓரிரண்டு பேர் சட்டமன்றத்துக்குள் செல்வதைவிட நம் கட்சி சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும்' என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
ஒருவேளை டார்ச் லைட் சின்னத்துக்கு கடைசிவரை ஓகே சொல்லாவிட்டால் தேர்தல் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அளவுக்கு பிடிவாதமாக இருக்கிறார் எங்கள் தலைவர். முதல்வருடன் துணை முதல்வருடனும் நட்புடன் இருப்பதால் அதைவைத்து அவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வருவார் என எண்ணுகிறார்கள், ஆனால், அதற்கு வாய்ப்பில்லை" என்றனர்.
தி.மு.க என்ன நிலைப்பாட்டில் இருக்கிறதென விசாரித்தோம், நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "மக்கள் நீதி மய்யம் உதயசூரியன் சின்னத்துக்கு ஒப்புக் கொண்டால் 3 தொகுதிகள்வரை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. ஆனால், ம.நீ.ம-வின் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். ஏற்கனவே எம்.பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தவிர்த்திருக்கிறேன் என தொடக்கம் முதலே பிடிக்கொடுக்கால் போராடி வருகிறார் கமல்ஹாசன்.
தமிழ்நாடு முழுக்க அவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி, விஜய்க்கு எதிரான நட்சத்திரமாக நிறுத்த முனைவது, வருங்கால சினிமா ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் ம.நீ.ம கேட்கும் டார்ச் லைட் சின்னத்தில் நிற்க 2 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க தலைமையும் சம்மதம் தெரிவிக்கலாம்" எனகிறார்கள்.
உதயசூரியன் ஆசிபெற்ற டார்ச் லைட் சின்னமா... டார்ச் லைட் ஆசிபெற்ற உதயசூரியன் சின்னமா.. இன்று மாலை தெரிந்துவிடும்!