கட்சியில் பதவி வழங்குவதாக ரூ.26 லட்சம் பெற்று மோசடி - தவெக மாவட்டச் செயலாளர் மீது புகார்
Top Tamil News March 24, 2026 11:48 PM

கட்சியில் பதவி வழங்குவதாக ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தவெக மாவட்டச் செயலாளர் மீது புகார் எழுந்துள்ளது.

தவெகவில் மகளிரணி பதவி வழங்குவதற்காக ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அக்கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி மீது ஷர்மிளா என்பவரின் கணவர் பாலாஜி மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பாலாஜி கூறுகையில்,  தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி தருவதாக கூறி தங்கப்பாண்டி எங்களிடம் ஐ-போன், சோபா, பிரிண்டர் வாங்கி உள்ளார். தங்கப்பாண்டி மகன் சஞ்சய் ஜிபே எண்ணிற்கு அவ்வப்போது பணமும் அனுப்பி வைக்கப்பட்டது, இதன் மொத்த மதிப்பு 10 லட்ச ரூபாய் ஆகும்.மேலும், தொழில் முதலீடு செய்யலாம் என 16 இலட்ச ரூபாயும் பெற்றுள்ளார். நிலத்தை அடமானம் வைத்து கொடுத்துள்ளதால் எங்கள் குடும்பம் கடன் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. இதனால் தான் என் மனைவி தற்கொலைக்கு முயன்றார். பணத்தை கேட்டால் தர முடியாது என மிரட்டுகிறார்கள். இவ்விவகாரம் தொடர்பாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் என்னிடம் போனில் பேசி 'அடுத்த ஆட்சி நம்முடையதுதான், ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்தையும் சரிசெய்துவிடலாம், அதனால் பிரச்னை எதும் செய்ய வேண்டாம்' எனக் கூறினார்

தமிழக வெற்றிக் கழக மேடையில் நிர்வாகிகளை ஏற்ற வேண்டும் என்றால் தங்கப்பாண்டிக்கு தலா 10,000 ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.  காவல்துறையில் புகார் அளிக்க கூடாது. ஊடகத்தில் பேட்டி அளிக்க கூடாது என என்னை மிரட்டுகிறார்கள் என தவெக பெண் நிர்வாகியின் கணவர் பாலாஜி புகார் அளித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.