கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் வழித்தடத்தில் இருந்து ஊத்தங்கரை நோக்கி பள்ளிப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது உப்பு மாரியம்மன் கோயில் அருகே பேருந்து ஓட்டுனர் தர்மன், பேருந்தின் ஹாரனை அடித்துள்ளார்.
அப்போது சாலையோரம் நின்றிருந்த இளைஞர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நிலையில், பேருந்தில் ஹாரன் அடித்ததால் இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, அந்த நபர் தனது நண்பருடன் சேர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். அத்துடன், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டுள்ளனர். அருகே இருந்த பொதுமக்கள் அவர்களை தடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வீடியோ ஆதாரத்தின் மூலம் அடாவடியில் ஈடுப்பட்ட இளைஞர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.