தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரேமாஜிராவ். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1.96 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அதிகாரிகள் மீண்டும் நடிகர் பிரம்மாஜி ராவ்விடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
நாட்டில் 05 மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் இருந்தால், அதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆனால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா வரும் இடங்களில் தாங்கள் கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது அதிர்ச்சியளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் பணத்திற்கான ஆவணங்கள் சரி பார்த்த பின் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று கூடலூரில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் பிரேமாஜி ராவ் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்து 1,96,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.