அந்த பொண்ணு ஏன் புதர்கிட்ட போச்சி?!.. விளாத்திக்குளம் சம்பவத்தில் உளறிய எஸ்.வி.சேகர்!...
Webdunia Tamil March 26, 2026 02:48 PM


சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் என்கிற கிராமத்தில் பிளஸ் டூ மாணவி தலையில் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில் சாயல்குடி பகுதியில் வசிக்கும் தர்ம முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சா போதையில் தான் அந்த குற்றத்தை செய்ததாக தர்ம முனீஸ்வரன் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே அவர் சில வருடங்களுக்கு முன்பு 65 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று சமீபத்தில்தான் ஜாமினில் வெளிவந்த நிலையில்தான் இந்த கொலையை தர்ம முனீஸ்வரன் செய்திருக்கிறார். இந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ள கருத்து பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

அந்தப் பெண் புதருக்கு பின்னால் நின்று கொண்டு வந்தார்.. அப்போது வந்து ஒருவர் அவரை தாக்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்.. அந்த பொண்ணு ஏன் புதருக்கு பின்னால் போகணும்? போலீஸ் தெரு விளக்கு போடுவார்களா? இல்லை புதருக்கு லைட் போடுவார்களா?.. பெண் குழந்தைகளின் அருமை தெரியாமல் பேசவில்லை.. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களை கடைக்கு கூட நாங்கள் அனுப்ப மாட்டோம்.. வாட்ச்மேன் போகட்டும்.. நம்மை நம்பி வந்த பெண்களுக்கு நாம்தான் பாதுகாப்பு கொடுக்கணும்.. எல்லா வேலையும் போலீஸ் எப்படி செய்ய முடியும்?’ என பேசியிருக்கிறார்..

இயற்கை உபாதை கழிக்கவே அந்த பெண் அங்கு சென்றார் என ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.. ஏழைகளுக்கு கழிப்பிட வசதியில்லாமல்தான் அப்படி போகிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் சென்றார் என எஸ்.வி சேகர் எப்படி கேள்வி எழுப்புகிறார்?.. அவர் பணக்காரர்.. அவருக்கு எல்லா வசதிகளும் இருக்கும்.. வீட்டில் இருக்கும் வாட்ச்மேனை வெளியே கடைக்கு அனுப்புவார்.. எல்லோரும் அதை செய்ய முடியுமா?’ என பலரும் அவரை திட்டி வருகிறார்கள்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.