மாம்பழம் சின்னம் – ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் – விவரம் இதோ
TV9 Tamil News March 27, 2026 12:48 AM

சென்னை, மார்ச் 26 : மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் கட்சியின் சின்னம் தொடர்பான விவாகரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகவும் உத்தரவிட்டது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கில் தீர்வு காணப்படும் வரை பாமகவின் சின்னமான மாம்பழத்தை முடக்கி வைக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரத்தையும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் 3 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க :வரும் தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – த.வெ.க தலைவர் விஜய்..

இதனையடுத்து ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிற்கு பாம்பழம் சின்னம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய மறுத்துள்ளது. மேலும் தன்னை தலைவராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்ததுடன் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறும் அறிவுறுத்தியது.

இதையும் படிக்க : கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு டான்ஸ் – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – என்ன நடந்தது?

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவரான அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சியின் உரிமை தொடர்பாக மோதல் நீடித்து வருகிறது. பாமகவின் மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிவடைந்த பிறகும் அவர் தலைவராக தொடர்வதாகவும் அவரை நீக்கி உத்தரவிடக்கோரியும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராமதாஸிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அன்புமணி தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், சசிகலாவின் புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.