உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், 21 நாள் பெண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் பொய்யானது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையை வளர்க்க வசதி இல்லை என்பதாலும், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையினாலும் குழந்தையின் தந்தை மக்சூத் இந்த நாடகத்தை ஆடியுள்ளார்.
குழந்தையை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சி குழந்தை கடத்தப்பட்டதாக 112 என்ற எண்ணிற்கு அழைத்து அவரே புகார் அளித்துள்ளார்.
மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கடத்தலுக்கான எந்த ஆதாரமும் கிடைக்காததால், காவல்துறையினர் மக்சூதிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையில்லாத ஒரு பெண்ணிடம் தனது மகளைக் கொடுத்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.
தவறு செய்ததை உணர்ந்த குழந்தையின் தாய், சமூக அவமானத்திற்கு பயந்தே இவ்வாறு பொய் சொன்னதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறையைத் தவறாக வழிநடத்தியதற்காகப் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்ட குழந்தை உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட உள்ளது.