ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைக் குறைக்காமல், அதனை மேலும் தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனின் ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டாம் என்று அதிபர் டிரம்பிடம் தொலைபேசி வாயிலாக இளவரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்கு ஆசியாவின் (மத்திய கிழக்கு நாடுகள்) அரசியல் வரைபடத்தை மாற்றி அமைக்க இது ஒரு “வரலாற்று வாய்ப்பு” என்று அவர் வர்ணித்ததாகவும், இந்த ராணுவ நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அவர் கோரியதாகவும் சவூதி உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சவூதி இளவரசர் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “சவூதி இளவரசர் எங்களுடன் இணைந்து போராடுகிறார். அவர் ஒரு போர்வீரர் என்பது உண்மை” என்று பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சவூதி அரேபியா நேரடியாக இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிப்ரவரி 28 முதல் அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் அரபு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்துள்ளது.
தனது நாட்டின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்போவதாகச் சவூதி எச்சரித்திருந்தாலும், போரில் நேரடியாகப் பங்கேற்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், “பாகிஸ்தான் முன்னெடுத்துள்ள அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தால் சவூதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.
மேலும் சவூதி நேரடியாகப் போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கவே முயல்கிறது. இருப்பினும், செங்கடல் பகுதியில் உள்ள சவூதியின் சொத்துக்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினால், சவூதி அரேபியா அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணியுடன் இணைந்து போரில் குதிக்க நேரிடும்” எனத் தெரிவிக்கின்றனர்.