ஈரான் தொடர்பான போர் சூழல் உலகளாவிய எண்ணெய் சந்தையை கடுமையாக அதிர வைத்துள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு சென்றடையும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகத்தில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்கள் மட்டுமே எரிபொருட்களை ஏற்றி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கும் எரிபொருள் வரத்து சீர்குலைந்த நிலையில், சில கப்பல்கள் மூலம் மட்டுமே எரிபொருள் கிடைத்து வருகிறது. இதற்கிடையில், ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை முன்பு எதிர்த்த அமெரிக்கா கூட, தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக தளர்வு காட்டியுள்ளது.
இதனால், இந்தியா மாற்று வழியாக ரஷியாவிலிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்டு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு அவசரகால திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த சேவையை மீண்டும் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் நேரடியாக எரிபொருள் பெறுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசுகள் தேர்வு செய்யும் 2 பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளும் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளன.பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, பெட்ரோல் நிலையங்களில் அதிகபட்சமாக 2,500 லிட்டர் வரை மண்ணெண்ணெய் சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசு தேர்வு செய்யும் குறிப்பிட்ட 2 நிலையங்களில் 5,000 லிட்டர் வரை சேமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் அனைத்தும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களுக்கு தடையின்றி விநியோகம் நடைபெறவும் மத்திய அரசு எடுத்துள்ள அவசர முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன.