தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் அந்தத் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.74 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். கல்விப் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு ஏழு கார்கள் மற்றும் ஒரு மினி டிரக் உள்ளதாகவும் தொழில் ரீதியாக ஒரு கோடியே பன்னிரண்டு லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபரான இவர் மீது இதுவரை எவ்விதக் குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஆ சோனியா எளிய பின்னணியைக் கொண்ட ஒரு கல்லூரி மாணவி மற்றும் இல்லத்தரசி ஆவார்.
இவரது கணவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் நிலையில் சோனியாவின் பெயரில் 8.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் அவரது கணவர் பெயரில் 20.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.
தமக்கு அசையா சொத்துகள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ள சோனியா தனது வங்கிக் கணக்கில் வெறும் 1500 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தொழிலதிபரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியும் நேருக்கு நேர் மோதும் வேலூர் தேர்தல் களம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.