சிலிண்டர்களை பதுக்கி மறுசுழற்சி செய்த கும்பல் கைது. கேஸ் நிறுவன ஊழியர் உள்பட மூவர் கைது.!
WEBDUNIA TAMIL April 02, 2026 02:48 PM

டெல்லியின் பாலம் கிராமத்தில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி, மறுசுழற்சி செய்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் ஒரு காலி இடத்தில் உரிமம் இன்றி சிலிண்டர்களை பதுக்கி வைத்து, ஒரு சிலிண்டரிலிருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றும் மோசடி நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு டெலிவரி ஊழியர்கள் என மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 45 பாரத் கேஸ் சிலிண்டர்கள், எரிவாயு மாற்ற பயன்படுத்தப்படும் முனைகள் , எடை போடும் இயந்திரம் மற்றும் ஒரு டெம்போ வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜானக்புரியை சேர்ந்த ஒரு எரிவாயு நிறுவனத்தின் ஊழியர்களான இவர்கள், எவ்வித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் லாபத்திற்காக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.