“ஈரானை கற்காலத்திற்கு அனுப்புவோம்” டிரம்ப் விடுத்த மிரட்டல்…. அடுத்த சில மணிநேரத்தில் வெடித்த குண்டு….!!
SeithiSolai Tamil April 03, 2026 09:48 AM

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தூதுவராகச் செயல்பட்டு வந்த ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கமல் கராஜி (Kamal Kharazi) மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்திலேயே வைத்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில் 81 வயதான கராஜி படுகாயமடைந்து, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அனுப்பிய ரகசிய செய்திகளை ஈரான் உச்ச தலைவரிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பில் இவர் இருந்த நிலையில், இந்தத் தாக்குதல் சமாதான முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானை குண்டுவீசி கற்காலத்திற்கே தள்ளுவோம்” எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனா, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்காக 5 அம்சத் திட்டத்தை முன்வைத்த போதிலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனியும், “இலக்கை அடையும் வரை போர் ஓயாது” என அறிவித்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் இன்னும் கருமையடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தால் பாகிஸ்தானின் சமாதானத் தூது முயற்சி தோல்வியடைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.