மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சாந்தி நிகேதன் காலனியில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் ஒன்று ஏறி இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை உறைய வைத்துள்ளது. வீட்டின் வெளியே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக ஒரு சிறுவனின் காலில் ஏறி அவனை கீழே தள்ளியது. கார் சக்கரம் முழுமையாக அவன் மீது ஏறி இறங்கிய நிலையில், அடுத்த சில விநாடிகளிலேயே அந்தச் சிறுவன் எதுவுமே நடக்காதது போல எழுந்து நின்றது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தக் கொடூர விபத்தில் சிறுவனுக்கு காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த உடனேயே கார் உரிமையாளர் சஞ்சய் அகர்வால், சிறுவனை மீட்டு அருகில் உள்ள பாம்பே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும், தனது காரை ஓட்டிச் சென்ற டிரைவரை அவரே நேரில் அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்ததும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. “விதி வலியது தான்.. ஆனால் அந்தச் சிறுவனுக்கு ஆயுள் அதைவிட கெட்டி” என இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.