பரங்கிப்பேட்டையின் எழுச்சி: மாற்றத்திற்கான 21 அம்சக் கோரிக்கைகள்!
Vikatan April 04, 2026 01:48 PM

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஒரு ஊரின் வளர்ச்சி என்பது அதன் சாலைகளிலும், கட்டிடங்களிலும் மட்டும் இல்லை; அங்கு வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகள் எவ்வளவு தூரம் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதில் தான் உள்ளது."

கடலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமாகவும், மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழும் பரங்கிப்பேட்டை, இன்று தனது வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிப்படைத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரக் குறைபாடுகள், போக்குவரத்து நெரிசல்கள் என மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்தப் பரங்கிப்பேட்டை மக்களின் குரலாக, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்வைக்கப்படும் 21 முக்கிய அம்சக் கோரிக்கைகள் இதோ...

பரங்கிப்பேட்டையின் 21 அம்சக் கோரிக்கைகள்

1. *உயர் கல்வி*: அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி & ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரி உடனே வேண்டும்.

2. *நிர்வாகம்*: பரங்கிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுக்கா (வட்டம்) உருவாக்கப்பட வேண்டும்.

3. *போக்குவரத்து*: நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் & பேருந்து பணிமனை அமைக்கப்பட வேண்டும்.

4. *நேரடி பேருந்து*: சென்னை (பைபாஸ்), திருச்சி, சேலம், வேலூர், நாகப்பட்டினம் ஆகிய 5 முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்துகள்.

5. *நகரப் பேருந்து*: குறிஞ்சிப்பாடி, வடலூர், லால்பேட்டை, சீர்காழி, சேத்தியாத்தோப்பு உட்பட 9 முக்கிய வழித்தடங்களில் புதிய நகரப் பேருந்துகள்.

6. *மீண்டும் இயக்கம்*: நிறுத்தப்பட்ட 322P, 599, 155, 347, 242, 49, 220 ஆகிய பேருந்து சேவைகளை உடனே மீண்டும் தொடங்க வேண்டும்.

7. *நீட்டிப்பு*: பொன்னந்திட்டு, புதுச்சத்திரம், சாமியார்பேட்டை வரை இயக்கப்படும் சில நகரப் பேருந்துகள் பரங்கிப்பேட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்

8. *ரயில்*: பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் சில விரைவு ரயில்கள் நிறுத்தம் & ரயில் நிலைய தரம் உயர்வு

9. *கடல்*: பரங்கிப்பேட்டை கடற்கரையை மக்கள் பயன்படுத்த இணைப்பு சாலை / பாலம் அமைக்க வேண்டும்

10. *அங்கீகாரம்*: பரங்கிப்பேட்டையை வரலாறு மற்றும் சுற்றுலாத் துறையாக முறையாக அங்கீகரிக்க வேண்டும்.

11. *தேர்தல்*: 40க்கும் மேற்பட்ட விடுபட்டுள்ள தெருக்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

12. *அலுவலகங்கள் இடமாற்றம்*: சிதறிக் கிடக்கும் RI, BEO, Agri, TNEB அலுவலகங்கள் அனைத்தும் பரங்கிப்பேட்டை மையப்பகுதிக்கு சொந்தக் கட்டிடத்தில் மாற்றப்பட வேண்டும்.

13. *சுகாதாரம்*: அரசு மருத்துவமனை 24 மணி நேரமும், நவீன வசதிகளுடன் இயங்கும் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக மாற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அதிகப்படுத்த வேண்டும்.

14. *மேம்பாலம்*: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அகரம் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

15. *அறிவுசார் மையம்*: நூலகம் & VAO அலுவலகத்திற்கு சொந்தக் கட்டிடம், நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் & கணினி வசதிகள் வேண்டும்.

16. *கல்வி*: அனைத்து பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள், நூலகம், மைதானம், குடிநீர், கழிவறை உள்ளி்ட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக இருக்க வேண்டும். சில பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பயிற்று மொழி பிரிவு வேண்டும்.

17. *வங்கி*: கிராம வங்கி, விவசாய வங்கி அமைக்க வேண்டும்.

18. *ரேஷன் கடை*: மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும், புதிய ரேஷன் கடைகளை உருவாக்க வேண்டும்.

19. *வாரச்சந்தை*: அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் விசாலமான இடத்தில் வாரச்சந்தை அமைக்கப்பட வேண்டும்

20. *விளையாட்டு*: நவீன உள் விளையாட்டு அரங்கம் வேண்டும்.

21. *நீர்வழி போக்குவரத்து*: பக்கிங்ஹாம் கால்வாய் தூர் வாரப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். நீர்வழி போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள், மாணவ-மாணவியர், மகளிர், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் என அனைவருக்குமான அடிப்படை உரிமைகள் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.