தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனது பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத் தலைவரான செல்வபெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் முடிந்த பிறகு மனநிறைவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன். இதை ராகுல் காந்தியிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்” என்று கூறினார்.
மேலும், “கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத் தலைவராக இருந்த நான், திட்டங்களை செயல்படுத்த முடிந்தாலும், உறவுகளை பராமரிப்பதில் சிரமம் இருந்தது. இனி முழுநேரமும் ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக வேலை செய்ய விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.
செல்வபெருந்தகையின் இந்த முடிவு, கட்சிக்குள் நீண்ட காலமாக இருந்து வந்த கோஷ்டி மோதல்களுடனும், வேட்பாளர் தேர்வு குறித்த சர்ச்சைகளுடனும் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சீட் வழங்கலில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்மீது அழுத்தம் அதிகரித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரசில் தலைமை மாற்றம் நிகழ வாய்ப்பு அதிகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.