'நெருக்கும் காவல்துறை? கடைசி நிமிடத்தில் கிடைத்த மெசேஜ்!'- விஜய்யின் சென்னை பிரசாரம் ரத்தான பின்னணி!
Vikatan April 06, 2026 05:48 PM

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென கடைசி நிமிடத்தில் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறை தரப்பிலிருந்து கடைசி நிமிடத்தில் கிடைத்த மெசேஜ்தான் பிரசாரம் ரத்தாக காரணம் என்கின்றனர் தவெகவினர். பின்னணி என்ன?

Tvk Vijay, விஜய்

தவெக தலைவர் விஜய் கடந்த மார்ச் 30 ஆம் தேதி சென்னையில் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் பிரசாரம் செய்திருந்தார். அன்றே வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்காததால் வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்கிறோம் என விஜய் தரப்பு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதியான இன்று சென்னையின் வில்லிவாக்கம், தி.நகர், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அந்தந்த தொகுதிகளில் தேர்தல் அலுவலர்களிடம் அனுமதியும் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து வில்லிவாக்கம், தி.நகர் தொகுதிகளில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் கூட்டம் கூட ஏற்ற இடம் இல்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தவெகவினர் வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் தொகுதிகளில் விஜய் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர்.

Vijay

இந்நிலையில்தான் நேற்று இரவு 9:45 மணியளவில் '

காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தவெக தரப்பிலிருந்து தகவல் வெளியானது.

கடைசி நிமிடத்தில் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது பற்றி வில்லிவாக்கம் மற்றும் தி.நகரை சேர்ந்த தவெக நிர்வாகிகளிடம் பேச்சுக் கொடுத்தோம். 'வில்லிவாக்கம், தி.நகர், அண்ணாநகர், விருகம்பாக்கம் என 4 தொகுதிகளில் அனுமதி கேட்டோம். ஒரு தொகுதிக்கு 3-4,மணி நேரம் கணக்கு வைத்து அனுமதி கேட்டோம். தலைவர் ஒரு பாய்ண்ட்டில் 10 நிமிடம் மட்டுமே பேசினாலும், மக்கள் கூட்டத்தால் ஒரு பாய்ண்ட்டுக்கு வந்து சேரவே 2-3 மணி நேரம் ஆகும். அதனால்தான் ஒரு பாய்ண்ட்டுக்கு 3 மணி நேரம் வைத்து அனுமதி கேட்டோம். அனுமதி கிடைத்ததே வில்லிவாக்கம், தி.நகர் என இரண்டு இடங்களுக்குதான்.

Vijay

வில்லிவாக்கத்தில் மதியம்12-1 வரை நிகழ்ச்சியை நடத்தவும், தி.நகரில் 2-6 வரைக்கும் அனுமதி கேட்டிருந்தோம். வில்லிவாக்கத்தில் பேசி முடித்துவிட்டு அண்ணா ஆர்ச் வழியாக தலைவர் தி.நகர் வருமாறு ரூட் மேப்பும் போட்டிருந்தோம். காவல்துறையினரும் நேரில் ஆய்வு செய்து NOC கொடுக்க தேர்தல் அலுவலர் அனுமதியும் கொடுத்துவிட்டார். நாங்களும் இரண்டு பாய்ண்டுகளிலும் தடுப்புகளை இறக்கி வேலையை தொடங்கிவிட்டோம். அந்த சமயத்தில்தான் தேர்தல் அதிகாரி தரப்பிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது. காவல்துறையினர் தி.நகரில் மதியம் 2-3 வரை மட்டும்தான் அனுமதி கொடுக்க முடியும் என்கின்றனர். எனவே அதற்குள் பிரசாரத்தை முடியுங்கள்.

அதேமாதிரி, அண்ணா ஆர்ச் வழியாக வராமல் வடபழனி 100 அடி ரோடு வழியாகத்தான் தலைவரின் வண்டி வர வேண்டும் எனக் கூறிவிட்டனர். மேலும், ஸ்பீக்கர்கள் வைக்கக்கூடாது என்றும் வேனில் உள்ள ஸ்பீக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றனர். வில்லிவாக்கத்திலிருந்து தி.நகருக்கு 1 மணி நேரத்தில் தலைவரை எப்படி வர வைக்க முடியும். யதார்த்தம் புரிந்தும் காவல்துறை ஏன் இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்தது என தெரியவில்லை..அதுவும் முதலில் அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் யாரின் அழுத்தத்தின் பேரில் நெருக்கடி கொடுத்தார்கள்? தவெக சென்னையில் வலுவாகி வருவதை ஆளுங்கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் சில அதிகாரிகளை வைத்து எங்களை முடக்கப் பார்க்கின்றனர்' என்றனர்.

Vijay

சென்னையில் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கொடுப்பதில் கமிஷனர் அருண்தான் கட்டையைப் போடுவதாக தவெக தரப்பு சந்தேகிக்கிறதாம். அதனால்தான் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்து வரும் ஆதவ்வும் அருணுக்கு எதிராக வெளிப்படையாக கொந்தளித்திருக்கிறாராம்.

காவல்துறை தரப்பில் விசாரிக்கையில், 'தவெகவினர் பிரசாரம் செய்யவிருக்கும் இடங்கள் சென்னையின் மிக முக்கிய பகுதிகள். அங்கே கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடுதான் அனுமதி கொடுக்க முடியும். அதை அடக்குமுறையாக நினைப்பது புரிதலற்ற போக்கே' என்கின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் 'எங்களை பிரசாரம் செய்யவிடாமல் முடக்குகிறார்கள்' என்ற லைனில், தவெக தரப்பு பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.