தி.நகரில் தவெக சார்பில் நடத்தப்பட இருந்த ஒரு நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி (RO) முறைப்படி அனுமதி வழங்கியிருந்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அந்த அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, “சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், கரூரில் நிலவியது போன்ற ஒரு பதற்றமான சூழலை திட்டமிட்டுச் சென்னையில் உருவாக்க முயற்சிக்கிறாரா?” எனப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு பதவியை தவறாகப் பயன்படுத்தி தவெகவின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறையின் இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகத் தவெக தரப்பு சந்தேகிக்கிறது. ஏற்கனவே பல மாவட்டங்களில் தவெக கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் சென்னையில் அனுமதி கிடைத்தும் அது உடனடியாகப் பறிக்கப்பட்டது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும், சட்ட ரீதியாக அணுகவும் தவெக தலைமை ஆலோசித்து வருகிறது.