கியூபா அரசு தனது நாட்டில் உள்ள 2,010 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப் போவதாக அறிவித்துள்ளது. புனித வாரத்தை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவை, வத்திக்கான் திருச்சபையுடனான நல்லுறவின் அடையாளமாக அந்நாடு பார்க்கிறது.
கைதிகளின் நன்னடத்தை, வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் இதில் அடங்குவர்.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் நிலவி வரும் சூழலில், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்டகாலக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
இருப்பினும், கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த மன்னிப்பு வழங்கப்படாது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட கைதிகள் இதுபோல விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், கியூபா மீதான சில பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளதும், ரஷ்யாவிடமிருந்து கியூபாவிற்கு எண்ணெய் விநியோகம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.
கியூபாவின் பொருளாதார மேம்பாட்டிற்கு அந்நாட்டின் அரசியல் மாற்றங்கள் அவசியம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.