வரும் சட்டமன்ற தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளதோடு, பதிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக பாடுபட்ட பெரியவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுகிறார் என தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளிம்பு நிலை மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதன் அடிப்படையிலேயே காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். அதில் இருந்து தற்போது பின்வாங்குகிறேன். எடுத்த முடிவில் இருந்து பின்வாங்குவதில் தவறில்லை. யுக்தியை மாற்றிக் கொள்வதிலும் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெரியவர் இளையபெருமாள்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பெரியவர் இளையபெருமாள். இவர் பள்ளியில் படிக்கும் போதே இரட்டைப் பானை முறையை எதிர்த்து, பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் தொடர்ச்சியாக பானைகளை உடைத்ததால் அந்த வட்டாரத்தில் இரட்டை பானை முறை நீக்கப்பட்டது.
அவர் இராணுவத்தில் பணியாற்றியபோது அங்கு நிலவிய பாகுபாடு குறித்து துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் செய்தவர். பின்னர் இராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்த இவர், ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை நடத்தினார். அத்துடன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தினார்.
1952 ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1976 வரை மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அவர், கருத்து வேறுபாடு காரணமாக 1989-ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி மனித உரிமை கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். பின்னர் 1980 முதல் 1984 வரை சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

கடந்த 1965 ஆம் ஆண்டு இந்திய அரசால் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையம் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தலைவராக பணியாற்றியவர். தொடர்ந்து இந்தியா முழுமைக்கும் பயணித்துச் சாதிய தீண்டாமை கொடுமைகள் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை அளித்தார்.
ஆனால் அந்த அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாகக் கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும், பின்னாட்களில் கொண்டுவரப்பட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டமும், அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் சட்டமும் இளையபெருமாள் ஆணையத்தலைவராக அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பெரியவர் இளையபெருமாள் முயற்சியால் பறை அடித்தல் உள்ளிட்ட தொழில்கள், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் முற்றிலும் ஒழிக்கப்பட்டன.
பின்னர் 1998-இல் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருது கொடுத்து கௌரவித்தது. முதுமையின் காரணமாக, 08.09.2005 அன்று இளையபெருமாள் காலமானார். அவரது நூற்றாண்டின் நினைவாக சிதம்பரத்தில் நினைவரங்கம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்தாண்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருவுறச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை தமிழ்நாடு அரசு அர்ப்பணித்தது.
இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுகிறார். இவர் ஒரு பொறியாளர். சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் உயரிய பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும் ஜோதிமணி அறியப்படுகிறார்.
இவர் நீண்ட காலமாகத் தீவிர அரசியலில் தடம் பதிக்கவில்லை. ஆனால், இளையபெருமாளின் கொள்கை வழித்தோன்றலாக விசிக-வில் தன்னை இணைத்துக் கொண்து வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.