தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான சி.ஆர்.சுந்தர்ராஜன், தனக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்து, தனது பதவியையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
சிவகங்கை தொகுதியை எதிர்பார்த்துப் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த நிலையில், திமுக கூட்டணியில் அத்தொகுதி ‘முக்குலத்தோர் புலிப்படைக்கு’ ஒதுக்கப்பட்டதும், அவருக்கு மாற்றுத் தொகுதியாகக் கருதப்பட்ட மேலூரும் வழங்கப்படாததுமே இந்த விலகலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தனது ராஜினாமா கடிதத்தை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுப்பியுள்ள சுந்தர்ராஜன், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அறிவிக்க உள்ளதால், அவர் மாற்று அணியில் இணைவாரா அல்லது சுயேச்சையாகக் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு சிவகங்கை அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.