மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கச் சென்ற தேமுதிகவின் எல்.கே. சுதீஷை, கட்சித் துண்டைக் கழற்றி வைத்துவிட்டு வருமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்களுடன் சேர்ந்து சுதீஷும் பதவியேற்றுக் கொண்டார்.
அப்போது கட்சித் துண்டுடன் அவர் மேடைக்குச் சென்றபோது, அவையின் மாண்பைக் கருதி அதை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுத் துண்டைக் கழற்றி வைத்துவிட்டுப் பதவியேற்ற சுதீஷ், பின்னர் மாநிலங்களவைத் தலைவரிடம் வாழ்த்துப் பெறச் சென்றார்.
அப்போது தனது சட்டையிலிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்தின் புகைப்படத்தை எடுத்து அவையில் இருந்தவர்களிடம் காட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். கட்சித் துண்டு விவகாரமும், விஜயகாந்த் புகைப்படம் காட்டப்பட்ட நிகழ்வும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.